புதன், 9 ஜூன், 2010

என்னை பற்றி.

வணக்கம் அன்பர்களே,
வாழ்க வளமுடன். என் பெயர் சி.அயோத்திராமன். சொந்த ஊர் மதுரை அருகே அலங்காநல்லூர். திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றுகிறேன்.என் வயது ஆன்மிகம் சம்பந்தமாக பேசுவதெனில் ஐம்பதுக்கு மேல், காதல்,கவிதை, சம்பந்தமாக பேசுவதெனில் பதினாறுதான்.வலைபதிவில் எழுதுவதன் நோக்கம், இயல்பாகவே எனக்கு மொக்கை போடுவதெனில் அலாதி பிரியம். அதுவும் புதிதாக ஏதேனும் ஒரு செய்தியை தெரிந்து கொண்டால் யாரிடமாவது பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும். இல்லையேல் அடியேனுக்கு தலை வெடித்து விடும். நேர்முகமாக மொக்கை போடுவது இன்னும் சலிக்கவில்லை என்றாலும் இணையதளத்தில் மொக்கை போட்டால் என்ன? என்று அடியேனின் உள்மனது சொன்ன காரணத்தால் இப்படி எழுத வேண்டியதாயிற்று. புத்தகங்கள் மூலமாக நான் தெரிந்து கொண்டது, இணையதளங்களில் நான் தேடிக் கிடைக்காத மற்றும் நான் தேடித் தெரிந்து கொண்ட விஷங்களையும், என்னுடைய அனுபவங்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அடுத்தடுத்து வர இருப்பவை அடியேனின் கட்டுரைகள், யோகா, தியானம், போட்டி தேர்வுகளை பற்றிய விஷயங்கள்,வரலாறு, பொதுஅறிவு, உபநிடதங்களின் தமிழ் மொழிப்பெயர்ப்புகள், பொதுவுடைமை சித்தாந்தம், ஸ்ரீமத் பகவத்கீதை, ஆன்மீக கட்டுரைகள், புத்த மதத்தின் புனித நூலான தம்மபதம், உளவியல், நான் எழுதிய கவிதைகள் (காதல் கவிதைகளும்தான் ). அனைத்தையும் படித்துவிட்டு பதிலுக்கு நீங்களும் மொக்கை(உங்களின் கருத்துகள்) போடுமாறு கேட்டு கொள்கிறேன். வாழ்க வளமுடன். நன்றி .

வியாழன், 3 ஜூன், 2010

வாழ்க வளமுடன்.

வாழ்க வளமுடன்.
நண்பர்களே இதுதான் எனது முதல் இடுகை. இந்த உடலை எனக்கு அளித்த என் பெற்றோரையும், தன்னை அறியும் கலையை எனக்கு கற்று கொடுத்த என் குருதேவர் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களையும் வணங்கி எழுதுகிறேன். பொதுவாக வாழ்த்துவது என்றால் எதோ பெரியோர்தான் வாழ்த்த வேண்டும் என்று தவறாக கருதுகிறோம். ஆனால் அது சரியான கருத்து அன்று. மாறாக யாரும் யாரை வேண்டுமானாலும் வாழ்த்தலாம். யாரேனும் நமக்கு தீமை செய்தால் நமது உதடுகள் சாபமே கொடுக்கும்.அது சரியானதா என்று சற்று ஆராய்ந்தால் சரியானதல்ல என்பதே நம் மனசாட்சி சொல்லும் பதிலாகும். எப்படி எனில் வினையின்றி விளைவில்லை எனதுதான் உண்மை. பள்ளியில் படிக்கும் இரு மாணவர்களில் ஒருவர் நன்றாக படிக்கிறார் மற்றொருவர் படிப்பின் மீது போதிய கவனம் செலுத்தாமல் ஏனோ தானோ என்று படிக்கிறார். இருவரில் யார் தேர்ச்சி பெறுவார் என்பது நாம் அறிந்த உண்மை. ஒருவர் செய்யும் செயலை கொண்டே அவரின் எதிர்கால வாழ்வு நிர்ணயிக்கப் படுகிறது. ஆக இப்போது ஏதேனும் நமக்கு இன்பமோ அல்லது துன்பமோ வந்தால் அது நமது கடந்த கால செயலின் விளைவேயாகும். எது எப்படி இருப்பினும் அதை ஏற்று கொண்டு அதற்கு தக்கபடி செயல் பட்டால் நமக்கு வெற்றி நிச்சயம். எப்படி நமது வெற்றிக்கு துணையாக இருந்தவர்களை வாழ்த்துகிறோமோ அவர்களை நன்றியோடு நினைவு கூறுகிறேமோ அது போல் நமது தோல்விக்கு காரணமானவர்களையும், நமது வெற்றிக்கு தடையாக இருந்தவர்களையும், நாம் வாழ்த்த வேண்டும். ஏனெனில் நமது வெற்றிக்கு நமது முன்வினை காரணமெனில் தோல்விக்கும் முன்வினையே காரணமாகும். எனவே நமது வினை(கர்மா) ஒன்றை அகற்றிய அவரை வாழ்த்துவதே சிறந்தது. வாழ்த்துவதற்கு வயதோ பதவியோ தகுதியே ஏதும் இல்லை. அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே போதும். எல்லோரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றறியேன் பராபரமே என்று பிராத்தனை செய்வோம். வாழ்க வையகம், வாழ்க வையகம்,வாழ்க வளமுடன்.